கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்

*ரூ.3.42 கோடியில் பல்வேறு பணிகள் நிறைவு

*தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கம்பம் மக்கள்

கம்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திமுக அரசு சார்பில், தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம்.

அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு அலுவலக கட்டிடங்களை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய அரசு அலுவலக கட்டிட பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

கம்பம் ஊராட்சி ஒன்றியம் கடந்த 1960ம் ஆண்டு உதயமானது. கம்பத்தை சுற்றியுள்ள ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது கம்பம் ஊராட்சி ஒன்றியம். பல்வேறு ஒன்றிய குழு தலைவர்கள் பதவி வகித்த பெருமை கொண்டது கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் பதவியேற்றதும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்ற காந்தியடிகளின் பேச்சுக்கு உயிரூட்டும் விதமாக தமிழக அரசு பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன்படி, தற்போது திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன், வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சிக்கான நிர்வாக அலுவலகங்கள், கூட்ட அரங்கு, ஒன்றியக்குழு தலைவருக்கான அறை, ஓய்வை, கழிப்பறை உள்ளிட்டவைகள் அடங்கிய புதிய வளாகமாக கட்டப்பட்டு வருகிறது.

மேலும், 2021-2022ம் ஆண்டிற்கு, 15வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் 5 ஊராட்சிகளில், 28 பணிகள், ரூ.75.02 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சி வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மேம்பாட்டு பிரிவில் 12 பணிகள் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரம் செலவில் செய்யப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ் 6 பணிகள் ரூ.25 லட்சத்திலும், அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் 3 நூலகங்களை ஊராட்சி பகுதிகளில் ரூ.4.44 லட்சம் செலவில் பழுது நீக்கப்பட்டுள்ளது.

பொது நிதியின் கீழ் 3 பணிகள் ரூ.4,51,000 மதிப்பிலும் மாவட்ட ஊராட்சி பொதுநிதியிலிருந்து 2 பணிகள் ரூ.10 லட்சத்திலும் நடைபெற்றது. ஒன்றியத்தில் உள்ள நாராயணத் தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 55 பணிகள் ரூ.180 லட்சத்திற்கு செய்யப்பட்டது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்திற்கு பணிகள் செய்யப்பட்டது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 11 பணிகள் ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் செலவில் செய்யப்பட்டது. ராஷ்டிரிய கிராம சூரஜ் திட்டத்தின் கீழ் ரூ.2.30 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டது.

மொத்தம் 117 பணிகள் நிறைவு

கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிமணி கணேசன் கூறும்போது, ‘‘கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார்.

அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று 2021- 22ம் ஆண்டில் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 117 பணிகள் ரூ.3 கோடியே 42 லட்சம் 72 ஆயிரம் மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.50 கோடியில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.’’ என்றார்.

Related Stories: