சென்னை: சென்னை ஐேகார்ட் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் இந்தமுறை ஏராளமானோர் போட்டியிடுகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடக்கவுள்ளது. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான பிரசாரம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரும் பார்கவுன்சில் உறுப்பினருமான ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவரும் தற்போதைய பார்கவுன்சில் உறுப்பினருமான ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளரும் தற்போதைய பார்கவுன்சில் உறுப்பினருமான எம்.வேல்முருகன், சத்தியபால், ராஜசேகர், ஏ.மோகன்தாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
துணைத்தலைவர் பதவிக்கு அப்துல் ரஹ்மான், அறிவழகன், முரளி, கோபால், ராமசிவசங்கர் உள்ளிட்டோரும் செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ், ஆர்.மோகன்தாஸ், சசிகுமார் உள்ளிட்டோரும், பொருளாளருக்கு ராஜேஷ், ஆனந்த், தாரா, கே.கே.சிவகுமார் உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். நூலகர் பதவிக்கு என்.விஜயராஜ், கஜலட்சுமி, ஜிம் ராஜ் மில்டன், வி.எம்.ரகு, இளையராஜா, பழனி உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எந்த தேர்தலிலும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் ஏராளமானோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.