போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் 15 கார்களின் கண்ணாடியை உடைத்த மலேசிய வாலிபர்; பாஸ்போர்ட், விசா பறிமுதல்

சென்னை: போதையில் 15 கார் கண்ணாடிகளை அடித்து உடைத்த மலேசிய வாலிபர் உட்பட 2 பேர் மீது 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மலேசிய வாலிபரின் பாஸ்போர்ட், விசாவும் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, தியாகராயா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15 கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து உடைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், மாம்பலம் காவல் நிலையத்தில் 1 வழக்கு என 3 வழக்குகள் பதிவானது. பின்னர் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தியபோது, ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த ராகுல் (22) என்றும், மற்றொருவர் மலேசியாவை சேர்ந்த தமீம் ராஜ் (26) என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், ராகுல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தலைமறைவாகி தற்போது  சென்னை தி.நகர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருவதும், மலேசியா நாட்டை சேர்ந்த தமீம் ராஜ் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக தனது தாய் மற்றும் சகோதரியுடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்து, தி.நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது.

 

தமீம் ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் விடுதியில் அருகே உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி புகைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பெட்டிக்கடையில் ராகுலும் சிகரெட் வாங்கி புகைத்துள்ளார். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அப்போது தமீம் ராஜ் நான் மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் சென்னையை சுற்றி பார்க்கணும் என்று கூறியுள்ளார். உடனே ராகுல், நான் உங்களுக்கு சுற்றி காட்டுகிறேன் என்று தனது பைக்கில் தமீம் ராஜை ஏற்றி கொண்டு இருவரும் மது போதையில் சென்றுள்ளனர். ஜெமினி மேம்பாலம் வழியாக செல்லும்போது, தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தார். அப்போது தமீம் ராஜ் மற்றும் ராகுல் வந்த பைக்கை வழிமறித்து விசாரணை நடத்திய போது, இருவரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் மற்றும் தமீம் ராஜ் ஆகியோர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த 15 கார்களின் கண்ணாடிகளை கற்களை கொண்டு அடித்து உடைத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ராகுல் மற்றும் மலேசியா வாலிபர் தமீம் ராஜ் ஆகியோரை பாண்டிபஜார் போலீசார் 2 வழக்குகளிலும், மாம்பலம் போலீசார் ஒரு வழக்கிலும் தனித்தனியாக கைது செய்தனர்.  மேலும், தமீம் ராஜ் பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: