மனைவியை அபகரித்து சென்றதால் நண்பனை வெட்டி ெகான்ற வாலிபர்; கிண்டியில் பரபரப்பு

ஆலந்தூர்: மனைவியை அபகரித்து சென்ற நண்பனை வெட்டி ெகான்ற வாலிபரால் கிண்டியில் பரபரப்பு ஏற்பட்டது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி சந்தியா (29). குப்பை பொறுக்கும் தொழில் செய்து வரும் இவர்கள்,  கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு  இவர்கள் சாப்பிட்டுவிட்டு, பஸ் நிறுத்தத்தில் ஒன்றாக தூங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து, அவ்வழியாக சென்ற  பெண் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த  சந்தியாவை தட்டி எழுப்பி, ‘‘உன் கணவரை பார். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்,’’ என்று கூறியுள்ளார். தூக்க கலக்கத்தில் எழுந்த சந்தியா, தனது கணவன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தியாவிடம்  விசாரணை நடத்தினர். அதில், சந்தியா ஏற்கனவே பாண்டியன்  என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், கணவரின் நண்பரான கார்த்திக்கிடம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான்   வீட்டை விட்டு வெளியேறி கார்த்திக்குடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சந்தியாவின் முதல் கணவனான  பாண்டியனை வலைவீசி  தேடி வந்தனர்.

இந்நிலையில்,  தேனாம்பேட்டை பகுதியில், பாண்டியன் பதுங்கி  இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அங்கு விரைந்த போலீசார், பாண்டியனை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பாண்டியன், தனது மனைவியை கார்த்திக் அபகரித்து சென்றதால், ஆத்திரமடைந்து, அவர்களை பழிவாங்குவதற்காக பல இடங்களிலும் தேடி வந்ததாகவும், அப்போது,  கார்த்திக் மற்றும் சந்தியா கிண்டி ஐந்து பர்லாங் ரோடு பகுதியில் உள்ள  பஸ் நிறுத்தத்தில் தங்கி இருப்பதை தெரிந்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று,  சந்தியாவுடன் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை  சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, போலீசார் பாண்டியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: