லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்த பெண் தற்கொலை; போலீசார் விசாரணை

பெரம்பூர்: கொடுங்கையூர் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெனிபர் (21). இவரது கணவர் திருநாவுக்கரசு. இவர்களுக்கு 4 வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தையும், 2 வயதில் சாரதி என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஜெனிபர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில், ஜெனிபருக்கும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் கடந்த ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள நமிதா என்பவர், நேற்று முன்தினம் மாலை, ஜெனிபர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, தூக்கில் சடலமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், விஜய்க்கு ஏற்கனவே திருமணமாகி புளியந்தோப்பில் பொற்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: