விருதுநகர்: தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய, மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுப்பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில், திருக்கொடுங்குன்றம் கல்வெட்டுகள், திருத்தங்கல் தொல்லியல் ஆய்வுகள், பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூல்களை வெளியிட, கலெக்டர் மேகநாதரெட்டி பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் வரலாற்று பதிவுகளில் தன்னுடைய தடத்தை அழுத்தமாக பதித்த மாவட்டமாகும்.