ரூ.25 கோடியில் 13,000 பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் 13,210 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவற்கான புதிய முயற்சியாக வானவில் மன்றம் என்ற திட்டம் 13,210 பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது.  

அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்ப்பதற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட STEM திட்டம்( அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம்) கொண்டு வரப்பட்டுள்ளது.  இதன் ஒரு அங்கமாக தற்போது வானவில் மன்றம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக  தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த திட்டத்தில், மேற்கண்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள். அதற்கான கருவிகளை அவர்களே கொண்டு வருவார்கள். அதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்தி ‘செய்து  கற்கும்’ அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவியாக  இருப்பார்கள். இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1200 நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் செயல்படும் 3095 உயர்நிலைப் பள்ளிகள், 3123 மேனிலைப் பள்ளிகள், 6992 நடுநிலைப் பள்ளிகள் என 13210 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியே 85 லட்சத்து 2 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகள் மேற்கொள்வார்கள். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மேற்கண்ட 13,210 பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இ யக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, திருச்சியில்  இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், கூடுதல் இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது, அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 100 மோட்டார் சைக்கிள்களை முதல்வர் வழங்குவார்.

இந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கருத்தாளர்கள் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று அறிவியல் செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள். முதல்வர் இன்று தொடங்கி  வைக்கும் இந்த திட்டத்தை அடுத்து தமிழகம் முழுவதும் மதியம் 2 மணி அளவில் 13210 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

Related Stories: