பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோயிலில் ரூபாய் 18.5 லட்சம் மேற்கொள்ளப்பட மதிப்பீட்டில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு துவக்கிவைத்தார். வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் 87.90 லட்சம் ரூபாய் மதிப்பில் திருக்குளம் சீரமைக்கும் பணி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோயிலில் 30 லட்சம் செலவில் திருப்பணிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு எபினேசர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; தமிழகத்தில் 49 கோயில்கள் கணக்கிடப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திமுக.வின் அடித்தளம் பலமாக உள்ளது. நான்காம் தலைமுறைக்கான அரசியல் அடித்தளத்தை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். இந்த இயக்கத்துக்கு எதுவெல்லாம் வளர்ச்சியை கொடுக்கின்றதோ அவற்றை ஆராய்ந்து தனது அரசியல் அனுபவத்தால் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சிறப்பாக அமைந்துள்ளன. அந்த வகையில், இந்த இயக்கத்திற்கு பல்வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரின் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கும் திமுகவுக்கும் அவர் உறுதுணையாக என்றும் இருப்பார்.

தமிழகத்தில் 8 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்றாக இருந்தது எட்டாக மாறியது. இந்தாண்டு மேலும் 10 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தைப் பூசத்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்கிற வீதத்தில் 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோயிலில் நாள்தோறும் 500 பேருக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் உறுதியாக இருக்கிறார். எனவே அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும். தங்க நகைகளை உருக்கி வைப்பு நிதியாக வைக்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் கோயில் வருமானம் பெருகுகிறது.  4000 கிலோ அளவிற்கான கோயில் நகைகள் வைப்பு நிதியாக வைக்கப்படும். திருக்கோயில் வளர்ச்சிக்கு வட்டித்தொகை பயன்படுத்தப்படும். எவ்வளவு இடையூறு வந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் திறன் இந்த ஆட்சிக்கு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: