திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக வரும் 6ம் தேதி மகா தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது. 7ம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் பஞ்ச ரதங்கள் வலம் வரும்.கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த பஞ்ச ரதங்களும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுப்பிரமணியர் தேர் பீடத்தை தவிர்த்து, அதன் மீதுள்ள விதான பகுதிகள் முற்றிலுமாக ரூ.30லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேரடி வீதியில் இருந்து மாட வீதிகளில் வலம் வந்து பகல் 2.45 மணிக்கு நிலையை அடைந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்திப் பெருக்குடன் முழக்கமிட்டனர்.