அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, கடந்த 2018 முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கொரோனா பரவலால் இணையவழியில் பயிற்சி நடத்தப்பட்டது. நடப்பாண்டு நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி முறையில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கி உள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரு வட்டாரத்துக்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,980 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 11ம் வகுப்பில் 20 பேரும், 12ம் வகுப்பில் 50 பேரும் பயிற்சியில் பங்கேற்பார்கள். இனி வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் மட்டும் 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: