புள்ளியியல் உதவியாளர், சுகாதார புள்ளியியலாளர் பதவி சென்னையில் டிசம்பர் 5ல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத்தேர்வு கடந்த  ஜனவரி 11ம் தேதி  முற்பகல் மற்றும் பிற்பகலில் நடந்தது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மார்ச் 22ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் புள்ளியியல் உதவியாளர் மற்றும் குடும்ப நலத்துறையில் வட்டார சுகாதார புள்ளியலாளர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 5ம் தேதி சென்னை தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை’ விண்ணப்பதாரர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

Related Stories: