குடும்ப தகராறில் மனைவி மாமியாருக்கு சரமாரி வெட்டு: கணவர் தப்பி ஓட்டம்

பெரம்பூர்: அயனாவரம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (21). அயனாவரம் நாகையா தெருவை சேர்ந்த தெபோரா (20). இரண்டு பேரும், கடந்த 5 வருடங்களாக  காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது, தெபோரா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால், அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 2 மாதமாக தெபோரா தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ராகேஷ் குடிபோதையில் மனைவியை பார்க்க அயனாவரம் நாகையா தெரு பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மனைவியை தனியாக அழைத்து, வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு, மனைவி வர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவி தெபோராவை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது சத்தம் கேட்டு ராகேஷின் மாமியார் ஸ்டெல்லா மேரி வந்து தடுத்தபோது, அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராகேஷை பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பித்து ஓடிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தெபோராவுக்கு வலது கை விரல்கள், இடது கை மற்றும் காது முகத்தில் வெட்டுக்காயம் விழுந்தது மற்றும் அவரது தாய் ஸ்டெல்லா மேரிக்கு கழுத்து மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ராகேஷை தேடி வருகிறார்.

Related Stories: