சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள படம் டிஎஸ்பி. இதில் அவருடன் அனு கீர்த்தி, ஷிவானி நாராயணன், புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கி உள்ளார். இமான் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார். படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது: கடந்த சில நாட்களாக எனது உடல்நிலை பற்றிய செய்திகள் வெளி வந்தது. மீடியாக்களும் மக்களின் அன்பும் பெருகிவிட்டதால் சிறிய இருமல் கூட பெரிய செய்தியாகி விடுகிறது.
அந்த காலத்தில் எலும்பு முறிந்து படுத்திருந்தால் கூட அடுத்த ஷூட்டிங் எப்போது? அடுத்த படம் என்ன? என்று தான் விசாரிப்பார்கள். இப்பொழுது அது மாறிவிட்டது. என்றாலும் மக்களின் அன்பால் நான் இப்போது நலமாக இருக்கிறேன். இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பு பல விபத்துகளில் சிக்கியபோதும் மக்களின் அன்பு காப்பாற்றி இருக்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் இந்தி படங்களை பார்க்கும் வாய்ப்பு தமிழ்நாட்டில் குறைவாக இருந்ததால் திலீப் குமார் பற்றி நான் அதிகம் தெரியாமல் இருந்தேன். சாகர் படத்தில் நடித்த போதுதான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகு அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரை ரகசியமாக சந்தித்து வாழ்த்து கூறுவேன்.
அதேபோல இப்போது தம்பி விஜய் சேதுபதி எனக்கு செய்கிறார். நாளை அவர் முன் மண்டியிடவும் ஒரு நடிகர் வருவார். விஜய் சேதுபதி என்னை போலவே சினிமாவை நேசிக்க கூடியவர். புதிய முயற்சிகளை செய்யக்கூடியவர். அந்த வகையில் அவரின் இந்த படத்தை பாராட்ட நட்பு ரீதியாக வந்திருக்கிறேன். அவர் என் படங்களில் நடிக்கிறார் என்பதற்காக அல்ல. அவர் மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். விழாவின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல் ‘‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்கிறேன். அன்பு காட்டிய மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி” என்றார்.