முன்னாள் உளவுப்பிரிவு தலைவர் பாக். புதிய ராணுவ தளபதி நியமனம்: பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக அந்நாட்டின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசிம் முனீரை நியமனம் செய்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவித் பஜ்வாவின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து ராணுவ தளபதி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு அசிம் முனீர், ஷாகிர் ஷம்ஷாத் மிர்சா, அஜார் அப்பாஸ், நவுமன் மெகமூத், பாயிஸ் ஹமீத், முகமது அமீர் உள்ளிட்ட 6 லெப்டினன்ட் ஜெனரல் பெயர்களை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ஷெபாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர், முப்படைகளின் தலைமை தளபதியாக ஷாகிர் ஷம்ஷாத் மிர்சாவை பிரதமர் ஷெபாஸ் நியமித்துள்ளார். இது தொடர்பான ஒப்புதல் அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்தார். அசிம் முனீர் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ.யின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.

Related Stories: