ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி: நாடு கடத்த உத்தரவு நீரவ் மோடி முறையீடு

லண்டன்: இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விடு தப்பியோடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த ஒன்றிய அரசு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, அங்கு அவர் கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘நீரவ் மோடிக்கு மனநிலை சரியில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்துகொள்வார்’ என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவ் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் இந்தியாவுக்கு அனுப்ப இம்மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது.  இந்நிலையில், நீரவ் மோடி முக்கிய சட்டத்தின் கீழ், மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதற்காக தனக்கு 2 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: