இரண்டு அணியிலும் மாறி மாறி இணைகின்றனர் நேற்று ஓபிஎஸ்... இன்று இபிஎஸ்...நாளை...? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

சென்னை: இபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைவதும், ஓபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தலைமையில் முதல் கட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்து இணைந்தனர். இதில் முன்னாள் சேர்மன் வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவடு உள்ளிட்டோர் அடங்குவார்கள்.  இரண்டாம் கட்டமாக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேப்பனஹள்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மது  (எ) ஹேம்நாத், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்தனர். மது (எ) ஹேம்நாத்தின் மனைவி லாவண்யா ஹேம்நாத் தற்பொழுது சூளகிரி ஒன்றிய சேர்மேனாக இருந்து வருகிறார்.

இதுபோன்ற சூழலில் ஓபிஎஸ் அணியில் இணைந்த மது (எ) ஹேம்நாத் அண்மையில் திடீரென முன்னாள் அமைச்சர் மு.தம்பிதுரையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.  மேலும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த பொழுது காவேரிப்பட்டினத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்து அவர்களை தாக்க முயன்ற ஆறுமுகம் என்பவர் தற்பொழுது ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோவிந்தராஜால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று பலரும் பரிந்துரைக்கப்படுவதாக அதிமுகவினர் முகம் சுளிக்கின்றனர். இவரும் தம்பிதுரையை சந்தித்துள்ளார். அதேபோல கே.பி.முனுசாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் அணியில் பதவிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக உள்ள கோவிந்தராஜ் தலைமையில் கட்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. எப்படி இவர்கள் தம்பிதுரையை சந்திக்கலாம் என்று ஓபிஎஸ் அணியில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலை நடைமுறையில் உள்ளபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஏன் 6 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரையில் மேற்கு கிழக்கு என 2மாவட்டமாகத்தான் செயல்படுகிறது.இதுபோன்ற சூழலில், இபிஎஸ் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்பொழுது ஓபிஎஸ் அணிக்கு செல்வதால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணிகளை தம்பிதுரை நடத்தி வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர்கள் உண்மையிலேயே அவருக்கு ஆதரவாக சேர்ந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணியிலேயே 2 பிளவுகள் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது.

Related Stories: