செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் பூந்தமல்லி எம்எல்ஏ வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தென்னைக ரயில்வே மண்டல மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அருகே உள்ளது செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் நிலையங்கள். இதில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும், மருத்துவ சிகிச்சைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் கடந்து சென்று வருகின்றனர். இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த செவ்வாப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதையை செவ்வாப்பேட்டை, கீழானூர்,  மேலானூர், சிட்டத்தூர், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்து அரண்வாயல், திருவூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம், முருக்கஞ்சேரி, நேமம், புதுச்சத்திரம், வெள்ளவேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படும் சமயத்தில் அவசர பணிக்கும் மருத்துவ தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.  இதனால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம்  கட்ட வேண்டும் என  அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2011- ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பாலம் கட்டும் பணி  அதே ஆண்டு துவக்கப்பட்தால் ரயில்வே கேட் மூடப்பட்டது. ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் செவ்வாப்பேட்டை, கீழானூர்,  மேலானூர், கிளாம்பாக்கம்,  தொட்டிக்கலை,  ராமாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அரண்வாயல், திருவூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம், முருக்கஞ்சேரி, நேமம், புதுச்சத்திரம், வெள்ளவேடு ஆகிய பகுதிகளுக்கு ஒரிரு கிலோ மீட்டர் தூரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை புட்லூர், காக்களூர்,  திருவள்ளூர் நகரம், மணவாளநகர் வழியாக கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல் வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2011 ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய மேம்பால கட்டுமானப் பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பாலம் இறங்கும் பகுதியை மாற்றிட  வேண்டுமென புகார் அளித்ததன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012- ம் தேதி, வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மற்றொரு ரயில்வே கேட்டை கடந்து தான் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இந்த வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய 2 ரயில்வே மேம்பாலப் பணிகளை முடிக்காததால் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாவதால்  2 ரயில்வே மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தென்னக ரயில்வே மண்டல மேலாளர் கணேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தார். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குறைந்த அளவு தூரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை பல கிலோ மீட்டர் தூரம் கடந்து சேரக்கூடிய நிலை உள்ளது. எனவே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், அதே போல் புட்லூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் முழுவதும் பூர்த்தி அடையும் நிலையில் இருப்பதால் அதனையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: