ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையத்தை, புதுப்பிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் ஏனம்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து, கட்டிடம் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால், மழைநீர் உள்ளே வரும் நிலையில் உள்ளது. இதில், மாணவர்களின் புத்தக பைகள் நனைவதனால் அவர்கள் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் இங்குள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் மாணவர்கள் நடந்து சென்று படித்து வந்தனர்.
இந்த, மழைநீர் நாளடைவில் கழிவு நீராக மாறி துர்நாற்றம் வீசி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், இந்த அங்கன்வாடி மையம் தற்போது அருகில் உள்ள சமூதாய கூடத்தில் இயங்கி வருகிறது.