மஞ்சள் நீராட்டு விழாவில் நெஞ்சுவலியால் சிறுமி பரிதாப சாவு

ஆவடி: மஞ்சள் நீராட்டு விழாவில் சிறுமி நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆவடி அடுத்த வாணியச்சத்திரம் கொடுவெள்ளி சுப்பு நகரை சேர்ந்தவர் கார்த்திக் (37) . கட்டிட தொழிலாளி. இவருக்கு 12 வயதில்  மகள் உள்ளார்.  இந்நிலையில்,  இவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்திருந்த நிலையில் காலை 5 மணி அளவில், சிறுமிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் எஸ்.ஆர்.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த மருத்துவமனை கொடுத்த  தகவலின் பெயரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, ரத்த போக்கு அதிகமாகும் வேளையில், ரத்த அழுத்தம் அதிகரித்து நெஞ்சு வலி வர வாய்ப்பு உள்ளது என்றனர். இருப்பினும், இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றது.

Related Stories: