பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பணி கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பணிநீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பணி  வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரி டாஸ்மாக் முன்னாள் ஊழியர்  தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணியாற்றிய விஜயகுமார், 3 ஆண்டுகளுக்கு  மேல் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். ஆனால், அவர் 8 ஆண்டுகளாக பணிக்கு  வரவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு மீண்டும் பணி வழங்க கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு  அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்று விஜயகுமார் உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடந்த  2013ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விஜயகுமாரின் விண்ணப்பத்தை  பரிசீலித்த டாஸ்மாக் நிர்வாகம், விசாரணை நடத்தி அவரை பணிநீக்கம் செய்து  2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 8  ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தனது குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளதாக கூறி,  மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விஜயகுமார் கடந்த ஆகஸ்ட்  மாதம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார். அதை பரிசீலிக்க கோரி  மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி  ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  ஏற்கனவே 2014ல் பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் வழக்கு  தொடராமல், பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பணி  வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மூலம், சட்ட நடைமுறையை மனுதாரர்  தவறாக பயன்படுத்தியுள்ளார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்த விஜயகுமாருக்கு 5  ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  அபராதத் தொகையை 30 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு  செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: