பூந்தமல்லி: லாரியில் அதிக எண்ணிக்கையில் ஏற்றி சென்ற 35 மாடுகளை மீட்ட போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து, லாரி உரிமையாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர். சென்னை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் தலைமையில், வருவாய்துறையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை மடக்கி, பிடித்து சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி 35 எருமை மாடுகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து,வருவாய்துறையினர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் லாரியையும், மாடுகளையும் பறிமுதல் செய்து விசாரித்தனர்.