பள்ளிப்பட்டு: ராமசமுத்திரம் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி நடைபெற்று உள்ளதாகவும், கணவன் மனைவிக்கு தனித்தனியாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010ல் திமுக ஆட்சியின் போது பெரியார் சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டது. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட சமத்துவபுரம் வீடுகள் பயனற்று வீனாகி வந்தது. இந் நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்து சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.