கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் அருங்காட்சியகத்தில் 2 சோழர் கால சிலைகள் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து 2 சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை முட்டுக்காடு பகுதியில் தட்சிண சித்ரா என்ற பெயரில் தனியார் வரலாற்று அருங்காட்சியம் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால உலோக சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிலைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழுவிற்கு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழு கடந்த 6ம் தேதி தட்சிண சித்ரா வரலாற்று அருங்காட்சியகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காட்சிப்படுத்தப்பட்ட சிலைகளில் வீணாதரர் சிலை, ரிஷப்தார் சிலை என 2 சிலைகள் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் என தெரியவந்தது.

உடனே அருங்காட்சியகத்தின் மேலாளர் அசோக்குமாரிடம் சிலைக்கான ஆவணங்களை கேட்ட போது, ‘இந்த சிலைகளை தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வமான்ய தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவர் எங்கள் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்’ என தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணியை தொடர்பு கொண்டு சிலைகள் குறித்து விசாரணை நடத்திய போது, முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், நன்கொடையாக வழங்கிய சிலைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.

 

அதைதொடர்ந்து அருங்காட்சியகத்தின் மேலாளர் அசோக்குமாரிடம் அதிகாரிகள் சட்ட விரோதமாக பழங்கால சிலைகள் வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர் 2 சிலைகளையும் திரும்ப சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், திருடப்பட்ட சிலைகளை நன்கொடையாக வழங்கிய மாசிலாமணி மீதும் அருங்காட்சிய மேலாளர் அசோக் குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சிலைகள் சோழர் காலத்தை சேர்ந்த பழமை யானது என்று தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Stories: