குடந்தையில் ரூ.5 கோடியில் தயாரான 23 அடி உயர ஐம்பொன் நடராஜர் சிலை வேலூருக்கு அனுப்பி வைப்பு

பாபநாசம்: கும்பகோணம் அருகே ரூ.5 கோடியில் தயாரான 23 அடி உயர ஐம்பொன்னால் ஆன, ஆனந்த  நடராஜர் சிலை லாரி மூலம் வேலூர் பொற்கோயிலுக்கு நேற்று மாலை அனுப்பி  வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திம்மக்குடியை சேர்ந்த  சிற்பச்சாலை உரிமையாளர் வரதராஜன். இவர் வேலூர் பொற்கோயிலுக்காக 2010ம்  ஆண்டு 23 அடி நடராஜர் சிலை செய்ய ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு  முறையில் ஊற்றி பணியை தொடங்கினார்.

பின்னர் போதிய நிதி இல்லாததால் அந்த  பணி பாதியில் நின்றது. 2012ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடத்தின்  ஒத்துழைப்போடு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு 10 ஆண்டில் பணிகள்  முடிவடைந்தது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 12ம் தேதி நடராஜர் சிலைக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளாமனோர் வழிபட்டு  சென்றனர். இந்நிலையில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை  செய்யப்பட்டு பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன்  உதவியுடன் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நேற்று மாலை 2 லாரிகளில் வேலூருக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சிலை வடிவமைத்த வரதராஜன்  கூறியதாவது: ரூ.5 கோடியில் 23 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட 15 டன்  எடையிலான ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டது. இந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  திம்மங்குடியில் இருந்து அரியலூர் மாவட்டம் தா.பழூர், ஜெயங்கொண்டம்,  விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருவண்ணாமலை,  கலசப்பாக்கம், போளூர் சாலை வழியாக வேலூர் புரம் நாராயணி பீடம்  பொற்கோயிலுக்கு இன்று (7ம் தேதி) சென்றடைகிறது என்றார்.

Related Stories: