17ம் தேதி கூடும் சட்டப்பேரவையில் நிரந்தர சட்டம்?.. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.

இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

இக்குழு தனது அறிக்கையை ஜூன் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, செப்.16ல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் அமைச்சரவை பரிந்துரை அக்.1ல் ஆளுநர் மாளிகைக்கு வந்ததாகவும், அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அக்.17ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: