தண்டையார்பேட்டை: தம்பதி எனக்கூறி வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆண்கள் வந்து செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தவமனி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு அந்த வீட்டை கடந்த 10 நாட்களாக கண்காணித்து வந்தனர்.
அதில், மர்ம நபர்கள் அங்கு வந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அந்த வீட்டில் நுழைந்து சோதனை செய்தபோது அங்கு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், திருவொற்றியூர் அப்பர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (43), பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சரளா (42) என்றும், இவர்கள் கணவன், மனைவி என்று கூறி கொண்டு வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி, பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சரளா, சதிஷ்குமார் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.