இஸ்லாமாபாத்: தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் உடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதால் அவர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அதிருப்தியில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்ற இடத்தில் சந்தித்தனர். மேலும், அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் கொரசனி மற்றும் அப்தாப் பார்கி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ராணுவத்தினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.