பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

ஸ்டோக்ஹோம்: இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்தாண்டு நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த 2ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரெஞ்சு பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ‘எல் ஆக்குபேஷன்’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக இவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவர்தான் எதிர்கொண்ட பாலின துன்புறுத்தல்கள், கருக்கலைப்பு, உடல்நலக்குறைவு மற்றும் பெற்றோரின் மறைவு ஆகிய நினைவுகளை எளிய நடையில் தொகுத்து வழங்கி இருப்பதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர் 30க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Related Stories: