பாலக்காடு: கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது பஸ்கள் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே வெட்டிக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் ஊட்டிக்கு தனியார் பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர். அதில், 26 மாணவர்கள், 16 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என 49 பேர் இருந்தனர். பஸ்சை எர்ணாகுளத்தை சேர்ந்த டிரைவர் ஜோமோன் (42) ஓட்டினார். நள்ளிரவில் பாலக்காடு அருகே வாளையார் வடக்கஞ்சேரியில் சென்றபோது, முன்னால் சென்ற காரை ஜோமோன் முந்த முயன்றார். அப்போது, காருக்கு முன்பாக கோயம்புத்தூரை நோக்கி 40 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதினார். இதனால், பஸ் பள்ளத்தில் உருண்டு நொறுங்கியது. இதில், ஜோஸ் (15), கிறிஸ்வின்டர் போன்தாமஸ் (15), தியா ராஜேஷ் (15), அஞ்சனா அஜித் (17), இமானுவல் (17) ஆகிய மாணவ, மாணவிகளும், உடற்கல்வி ஆசிரியர் விஷ்ணு (33), அரசு பஸ்சில் பயணித்த 3 பேர் உட்பட 9 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.