உ.பி.யில் தசரா விழாவில் பயங்கரம்: தீயிட்டு எரித்த மக்களை திருப்பி தாக்கிய ராவணன்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் ராவணனின் கொடும்பாவியை தீயிட்டு எரித்தபோது, திருப்பி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் ராமாயண காவியத்தில் வரும் 10 தலை கொண்ட இலங்கை மன்னன் ராவணனை அயோத்தி மன்னர் ராமர் கொன்றொழித்த திருநாளை விஜயதசமி என்ற பெயரில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதான் தசரா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன் கொடும்பாவியை தீயிட்டு எரிப்பார்கள். அந்த காட்சியை கண்டு மக்கள் பரவசம் கொள்வது வழக்கம். அவ்வகையில், நாடு முழுவதும் தற்போது தசரா கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி திடலில் நேற்றிரவு ராவணனின் கொடும்பாவியை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து அக்காட்சியை கண்டுகளித்தனர். அப்போது, ராவணனின் கொடும்பாவியை வெடித்து சிதறடிப்பதற்காக உள்ளே பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் ஏவுகணைகளாக, மாறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தது. இதைகண்டு பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும் செய்வதறியாமல் திகைத்தவாறு தலைதெறிக்க ஓடிய காட்சிகளை ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவுசெய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த பதற்றமான களேபரம் ஓய்வதற்குள் அந்த திடலுக்குள் முரட்டுத்தனமாக பாய்ந்து வந்த ஒரு காளை நிலவரத்தை மேலும் கலவரமாக்கி, பார்வையாளர்களை மேலும் பீதிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், அரியானா மாநிலத்தின் யமுனாநகரில் நேற்று நடைபெற்ற தசரா விழாவில் மிகப்பெரிய அளவில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ராவணனின் கொடும்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது. நல்லவேளையாக, பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை என்று யமுனாநகர் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2018, அக்டோபரில் நடந்த தசரா திருவிழாவின்போது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரிட்சர் அருகாமையில் உள்ள ஜோடா பதக் என்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ராவணன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்கள் உற்சாகம் மிகுதியால் தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்தபோது இருபுறங்களில் இருந்தும் வேகமாக வந்த இரு ரயில்கள் மக்கள் கூட்டத்துக்கிடையில் மோதிய கோர விபத்தில் சுமார் 60 பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்க்கது.

Related Stories: