திருப்பூரில் பரிதாப சம்பவம்: ஆதரவற்றோர் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் அருகே அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கம் போல் காலையில் விடுதியில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை உண்ட சிறுவர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட போது, 10 முதல் 13 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 சிறுவர்களில், ஒருவரின் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 2 பேரின் உடல் விவேகானந்த சேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சேவாலயாத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுதியில் காலை உணவு சாப்பிட்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: