ஜெனிவா: இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்ரிக்க நாடான காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இவர்கள் டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால் இறந்ததாக காம்பியா அரசு சந்தேகித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அது உடனடியாக கண்டறிந்து திரும்ப பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.