சென்னையில் கனமழையால் பாதிப்பு இருக்காது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: சென்னை மக்கள் மழை, வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. எனவே, கன மழை பெய்தாலும் பாதிப்பு இருக்காது என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார். சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைகால வெள்ள தடுப்பு பணி மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நடந்துவரும் பல்வேறு பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். உடன், சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குபின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி, நீர்மேலாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அக்டோபர் 15ம்தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் 90 சதவீத பணி நிறைவடைந்து இருந்தாலும் 10 சதவீத பணி முடியாமல் இருப்பதால் விபத்தை தடுக்கும் வகையில் முழுமையாக பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணி நிறைவடையும். இந்த முறை சென்னையில் மழை, வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மழைநீர் வடிகால் பணிகள் செப்பனிடுவதாக இருந்தாலும், கழிவுநீர் வடிகால்வாய் சீர்செய்வதாக இருந்தாலும் 3 துறைகள் சேர்ந்து செயல்படவேண்டிய நிலை உள்ளது.

சென்னையில் கூவம் நதி நகரை மையமித்து இருப்பதால் கழிவை அங்கு விடவேண்டிய சூழல் உள்ளது. முதல்கட்டமாக அதிலுள்ள கசடுகளை அகற்றுவதன் மூலம் நீர்வழி பாதை சீர்செய்யப்பட்டு, மழைகாலம் முடிந்ததும் கூவம் நதி நிரந்தரமாக சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். லண்டனுக்கு இணையாக கூவம் நதியை பார்க்க முடியும். மதுரவாயல் துறைமுகம் சாலை 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஏற்கனவே இருந்த அரசாரங்கம் ஒத்துழைப்பு தரவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் மதுரவாயல், துறைமுகம் சாலைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 5,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரவாயல்-துறைமுகம் மேல்மட்ட சாலைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 2024ல் மதுரவாயல் உயர்மட்ட சாலையை திறக்கும் வகையில் பணி நடைபெற உள்ளது. சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: