வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு கீழ்ப்பாக்கம் மனநல காப்பக மாஜி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உதவி காசாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சத்தியநாராயணன். இவர், 1997 முதல் 2006ம் ஆண்டுகளுக்கு இடையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சத்திய நாராயணன் 20 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தனது மகன்கள் ராமன், லட்சுமணன் ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக 15 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சத்தியநாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகன் லட்சுமணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மற்றொரு மகனான ராமன் பெயரில் உள்ள சொத்துக்கள் அவரது சொந்த வருமானத்தில் வாங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி அவர் விடுதலை செய்யப்படுகிறார். லட்சுமணன் பெயரில் உள்ள சொத்தை லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: