சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் உத்தரவின்படி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் எம்எஸ்வி கண்காட்சியில் பங்கு கொள்ள கடந்த 3ம் தேதி இரவு செக் குடியரசு நாட்டிற்கு சென்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் (4ம் தேதி) செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப்பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசனும் எம்எஸ்எம்இ குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்கள்.