சென்னை: மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் ‘பேனா’ சின்னம் அமைப்பதற்கு, சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தயாரித்து, தமிழக அரசு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அதற்கான திட்டப் பணிகள் நடக்கின்றது. அது தொடர்பாக வல்லுநர் குழு பரிந்துரைகளும் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்கு நடுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடந்த மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவுகளை சுட்டிக் காட்டி, தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்தில் கடலுக்குள் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் தொடர்பான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அதற்கான அனுமதியை ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் வல்லுநர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.