காதல் மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ் தற்கொலை: மருத்துவ பரிசோதனையில் விஷம் குடித்தது தெரிந்தது

சென்னை: காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த 1ம் தேதி வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் அவரது வாயில் இருந்து நுரை தள்ளியதை தொடர்ந்து பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் வாலிபர் விஷம் குடித்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர். பிறகு போலீசார் வாலிபரின் செல்போனை வைத்து விசாரணை நடத்திய போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த வாலிபர், காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ்(31) என தெரியவந்தது.

இவர் தற்போது சென்னை வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990களில் சின்னத்திரையில் அறிமுகமான இவர், ‘மர்ம தேசம், ஜீ பூம்பா’ உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்து மக்களிடையே அறிமுகமானவர். தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகராக வளர்ந்துள்ளார். லோகேஷ், அனிஷா(28) என்பவரை காதலித்து, 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் லோகேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லோகேஷ் தனது இயக்கத்தில் புதிய படம் ஒன்று எடுக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது காதல் மனைவி அனிஷாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அனிஷா தனது 2 மகன்களுடன் காட்டுப்பாக்கத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். தனது காதல் மனைவி பிரிந்து சென்ற மனம் வருத்தத்தால் லோகேஷ் முழு நேரம் போதையில் இருந்து வந்துள்ளார். கடந்த 30ம் தேதி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க லோகேஷ் நேரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவியிடம் ‘நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அழைத்துள்ளார். அதற்கு அனிஷா போதை பழக்கத்தை விடும் வரை உன்னுடன் நான் சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறி தனது 2 மகன்களையும் லோகேஷிடம் காட்டாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

பிறகு மனமுடைந்த லோகேஷ் கடந்த 1ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மீண்டும் தனது காதல் மனைவிக்கு போன் செய்து குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் இணைப்பை துண்டித்துள்ளார். பிறகு மனமுடைந்த அவர், தனது வேதனையை சக நண்பர்களுக்கு கூறி அழுதுள்ளார். அதன் பிறகு தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து போலீசார் நடிகர் லோகேஷ் தற்கொலை முயற்சி குறித்து அவரது மனைவி அனிஷா மற்றும் அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் லோகேஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வந்து பார்த்து உடன் இருந்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனில்லாமல் நடிகர் லோகேஷ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மர்ம தேசம், ஜீ பூம்பா, உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்து மக்களிடையே அறிமுகமானவர்.

Related Stories: