சென்னை: காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த 1ம் தேதி வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் அவரது வாயில் இருந்து நுரை தள்ளியதை தொடர்ந்து பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் வாலிபர் விஷம் குடித்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர். பிறகு போலீசார் வாலிபரின் செல்போனை வைத்து விசாரணை நடத்திய போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த வாலிபர், காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ்(31) என தெரியவந்தது.
இவர் தற்போது சென்னை வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990களில் சின்னத்திரையில் அறிமுகமான இவர், ‘மர்ம தேசம், ஜீ பூம்பா’ உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்து மக்களிடையே அறிமுகமானவர். தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகராக வளர்ந்துள்ளார். லோகேஷ், அனிஷா(28) என்பவரை காதலித்து, 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் லோகேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லோகேஷ் தனது இயக்கத்தில் புதிய படம் ஒன்று எடுக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.