காந்திநகர்: குஜராத்தில் ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை கூரியர் நிறுவனம் மூலமாக பட்டுவாடா செய்ய முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், மகாராஷ்டிராவிலும் கள்ளநோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட முக்கிய குற்றவாளி விகாஸ் ஜெயின் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.