சிவகங்கை: சிவகங்கையில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக அப்பகுதிமக்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மழை காலங்களில் மண் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.