கொடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: மலைகளின் மீது தவழ்ந்து செல்லும் மேகமூட்டங்களை ரசித்தனர்

கோத்தகிரி: ஆயுதபூஜை,விஜயதசமி, காலாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சி முனையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் தொலைநோக்கி கருவி மூலம் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதேபோல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்திருந்தனர்.

இந்நிலையில் கோடநாடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலகியது. அப்போது தமிழகம் கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த அடர்ந்த மேகமூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலாப் பயணிகள் மெய் மறந்து வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: