புதுடெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து சீனாவின் குவாங்சூ நோக்கி மஹான் நிறுவனத்தின் டபிள்யூ581 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்திய வான் எல்லையை கடக்கும் போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது. ஈரான் விமானி உடனடியாக இந்த தகவலை டெல்லி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானங்கள் பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானதளங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.