சென்னை: இளைஞர்களின் நேரத்தை திருடி, அவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் வேலைக்கான வியாபார போட்டி நடக்கிறது என விஜய் சேதுபதி கூறினார். சென்னையில் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது: யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். ஏனென்றால் நேரம் இருக்கிறது. இன்றைக்கு நம்முடன் சண்டை போட்டவனை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும்போது அவன் நமக்கு நண்பனாகிறான். எல்லாவற்றுக்கும் நேரம் கொடுங்கள். உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல்ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம், உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளைய செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான போட்டி நடக்கிறது.