ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு, அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.