சென்னை: கோயிலுக்கு சென்றதை நோட்டமிட்டு, லேத் பட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (49). இவர் அமைந்தகரையில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிருக்கு சென்றார். அங்கிருந்து, இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முனுசாமி உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் உள்ள பீரேவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 20 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. உடனே சம்பவம் குறித்து முனுசாமி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து, வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.