சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமாரின் தம்பி ஜீவானந்தம் (51), அதே பகுதியில் சமையல் காஸ் ஏஜன்சி நடந்தி வந்தார். ஜீவானந்தத்தின் வீட்டின் அருகே உள்ள கிடங்கில், சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 28ம் தேதி இரவு 7 மணிக்கு ஏற்பட்ட தீவிபத்தில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின. நான்கு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த ஜீவானந்தம், அவரது 3 மகள்கள் மற்றும் வேன் டிரைவர், ஊழியர் உட்பட 12 பேர் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.