சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பட்டியல் இன மக்களின் அன்றாட தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகாரின்பேரில், அரசு நிலத்தை சுற்றி கட்டியிருந்த தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள திரவுபதி அம்மன் ஆலயத்தின் அருகே அரசுக்கு சொந்தமான 55 ஏக்கர் நிலத்தில் ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த தடுப்பு சுவரினால் தங்களின் அன்றாட கால்நடை மேய்த்தல் மற்றும் கூலி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.