பிறந்தநாளை கொண்டாட மனைவி வராததால் கம்பெனி ஊழியர் தற்கொலை

பல்லாவரம்: பிறந்த நாள் கொண்டாட மனைவி வராததால் விரக்தியடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் அடுத்த பெருமாள் நகர் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (39). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் ஷோரூமில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜெய்கிருஷ்ணனிடம் கோபித்துக் கொண்டு, இந்துமதி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெய்கிருஷ்ணன் தனது பிறந்த நாளை முன்னிட்டு, வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த உடன் மனைவிக்கு போன்செய்து, பிறந்தநாளை கொண்டாட பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, உடனடியாக தமது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால், இந்துமதியோ அவரின் அழைப்பை உதாசீனப்படுத்திவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால், விரக்தியடைந்த ஜெய்கிருஷ்ணன், தனது பிறந்த நாளில் கூட, தன்னை பார்க்க மனைவி, பிள்ளைகள் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் தனது அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, வெகுநேரம் ஆகியும் தனது கணவரிடம் இருந்து மீண்டும் போன் வராததால் சந்தேகமடைந்த இந்துமதி, உடனடியாக பல்லாவரம் வந்து தனது வீட்டை பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

இதனால் சந்தேகமடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஜெய்கிருஷ்ணன் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

 இதுகுறித்து, பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த ஜெய்கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட மனைவி, பிள்ளைகள் வராததால் விரக்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: