நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கியிருப்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கானோர் உதகையில் திரண்டு இருப்பதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2ம் சீசன் காலமாகும். அப்போது நிலவும் மிதமான காலநிலையில் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆகியவர்கள் திறந்து வைத்தனர்.