குமரி அருகே பள்ளியில் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து ெகாடுத்து 6ம் வகுப்பு மாணவனை கொல்ல முயற்சி?: வாய், குடல் பகுதி வெந்தது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவன் 11 வயது சிறுவன். அதங்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24ம்தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

அன்றைய தினம் விடுமுறையை கொண்டாடும் வகையில் மாணவர்கள் ஒருவருக்ெகாருவர் இனிப்புகளை பரிமாறி உற்சாகமாக இருந்தனர். அந்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து சிறுவனுக்கு, சக மாணவன் ஒருவன் குளிர்பானம் கொடுத்துள்ளான். அந்த மாணவனுடன் எந்த பழக்கமும் இல்லாததால் தனக்கு குளிர்பானம் வேண்டாம் என்று கூறி விட்டு சிறுவன் செல்ல முயன்றுள்ளான்.

அப்போது வலுக்கட்டாயமாக குடிக்க வேண்டும் என கூறி சிறுவனை செல்ல விடாமல் தடுத்து அந்த மாணவன் குளிர்பானத்தை குடிக்க செய்துள்ளான். குளிர்பானத்தை குடித்து விட்டு, சிறுவன் வீட்டுக்கு வந்து விட்டான். மறுநாள் காலையில் திடீரென காய்ச்சல் வந்தது. ஏற்கனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சிறுவன் வீட்டிலும் இதை சாதாரண காய்ச்சல் என நினைத்தனர்.

உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாக வில்லை. 2, 3 நாட்களில் காய்ச்சல் அதிகரித்தது. மேலும் சிறுவனுக்கு வயிற்று வலி, வாந்தியும் ஏற்பட்டது. ஜீரண கோளாறு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தான். நாக்கு பகுதியும் வெந்தது போல் மாறியது.

உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது தான் வாயில் இருந்து குடல் வரை வெந்து இருந்தது தெரிய வந்தது. ஆசிட் போன்று ஏதோ திரவத்தை குடித்ததால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறினர்.

அதன் பின்னரே சிறுவன், பள்ளியில் குளிர்பானம் குடித்த விபரத்தை கூறினான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். களியக்காவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

எனவே அதை ஆய்வு செய்து, சிறுவனுக்கு குளிர்பானம் கொடுத்த மாணவன் யார்? என்பதை கண்டுபிடித்த பின்னரே அதில் கலந்தது என்ன? என்பது தெரிய வரும் போலீசார் கூறி உள்ளனர். டாக்டர்கள் கூறுகையில், ஸ்லோ பாய்சன் தன்மை கொண்ட அமிலத்தன்மையுடன் கூடிய திரவத்தை கலந்து கொடுத்துள்ளனர். மிகவும் மெதுவாக பாதிப்பு தொடங்கி உள்ளது என்றனர்.

தற்போது சிறுவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்பானத்தில் ஏதாவது கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு பிரச்சினையாக இருக்குமா? என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது. குளிர்பானம் கொடுத்த சக மாணவனை கண்டுபிடித்த பின்னரே இது பற்றிய முழு விபரம் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: