பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாத யாத்திரையை பீகாரில் நேற்று துவக்கினார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்,பாஜ உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் துணை தலைவராக பொறுப்பு வகித்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் அக்கட்சியில் இருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காங்கிரஸ் அழைப்பை அவர் ஏற்க மறுத்தார். பின்னர் அவர், ‘‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.